title

.

முகப்பு

Thursday, January 23, 2014

நெல் விதைத்து புல் அறுக்கும் விவசாயிகள்

                                                                       


              நெல்லை விதைத்து புல்லை அறுவடை செய்யும் நிலைக்கு இம்முறை வட மாகாண விவசாயிகளை ஏமாற்றியுள்ளது இயற்கை.யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் முழுவதும் மழையை நம்பி காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இம்முறை வெறுங்கையுடன் நொந்துபோயுள்ளனர். இயற்;கையை நம்பியிருந்த எம்மை அந்த இயற்கை ஏமாற்றிவிட்டது. இறுதியில் எமக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது என்கிறார்.  நாவாந்துறையைச் சேர்ந்த விவசாயி தம்பிராசா சண்முகலிங்கம்.  இவர் நாவந்துறை, ஆனைக்கோட்டை விவசாய சம்மேளன தலைவராகவும் உள்ளார்.

                                                 நீண்ட காலமாக நெற்பயிர்செய்கை இவரது பிரதான தொழில். முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் மழையில்லாமல் நெற்பயிர்கள் எல்லாம் நாசமாய் போய்விட்டன. வயல் நிலத்தைப்பார்க்கும் போதெல்லாம் வயிறு பற்றி எரிகின்றது. கடந்த வருட உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது என்று தன் சோகத்தை எம்மிடம் பகிர்ந்து கொண்டார் சண்முகலிங்கம். இது அவரது குரல் மட்டுமல்ல யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 90 வீதமான விவசாயிகளின் குரல்.
எங்கட ஆணைக்கோட்டை - உயரப்புலம் விவசாய சம்மேளனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 90 வீதமான விவசாய நிலங்கள் இந்த வருசம் மழையில்லாமல் எல்லாம் அழிஞ்சு போச்சுது. எங்கட இடத்தில குளங்கள் எதுவும் இல்ல. முற்றுமுழுதா மழையை நம்பி தான் நாங்கள் நெல் போடுறனாங்கள். போன வருசமும் 28 பரப்பில நெல் போட்டனான். அந்த 28 பரப்பில ஒரு பரப்பு நெல் கூட விளையல. வயல் பக்கம் போற நேரமெல்லாம் கடன் பட்டு வாங்கி செய்தது எல்லாம் இப்படியா போச்சுது எண்டு மனம் வேதனைப்படும் என்று தன் இயலாமையை எங்களிடம் கொட்டித்தீர்த்தார் சண்முகலிங்கம்.
                                               மழை எங்களை ஏமாத்திப்போட்டுது.   அதிலையும்  தம்பிப்பிழைத்த கொஞ்ச நாற்றுக்களையும் கட்;டாக்காலி கால் நடைகள் விட்டு வைக்குது இல்லை. இந்த கட்டாக்காலி மாடுகளை எங்களால புடிக்கேலாது. எங்களுக்கு வயசு போட்டுது. இப்பத்தைய இளம் பொடியலை கேட்டால் தங்களுக்கு இது கௌரவம் கெட்டுப்போடும் எண்டு சொல்லுறாங்கள். இதால இனிமேல் காலத்தில் எங்கட பரம்பரை தொழிலை விட்டுட்டு பேசாமல் இருக்கோனும் போல தான் தோனுது.
 என்கிறார் சுப்ரமணியம் கந்தையா. இவரும் நாவந்துறை பகுதியில் நெல்விதைத்து இருந்ததையும் இழந்து நிற்பவர்.
சில இடங்களில்ல மழையில்லை எண்டாலும் குளத்தை நம்பியாச்சும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளுவாங்கள். ஆனால் எங்கட இடத்தில
ஒரு குளம் கூட இல்லை. இது தான் பிரச்சினை. பக்கத்தில கடல் இருக்கிறதால குளம் வெட்டேலாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தம்பிராசா சண்முகலிங்கம்
இது போதாதென்று இந்த வயல் நிலங்களில இருந்து மண்ணை வெட்டி எடுத்துக்கொண்டு போறாங்கள்.  இருக்கிற கொஞ்ச விளை நிலமும் உவராகிக்கொண்டே வருகுது.  இதால கொஞ்ச காலத்தில இங்க நெல்லுப்போடேலாமல் வரப்போகுது. இதை நாங்கள் பொலிஸிட்டையும் சொல்லி முறைப்பாடு ஒண்டும் குடுத்தம். இது வரைக்கும் எந்த பிரியோசனமும் இல்லை. இனி எங்க போய் சொல்லுறது எண்டு எங்களுக்கு தெரியேல்ல எனவும் அலுத்துக்கொண்டார் கந்தையா சொந்தமா வயல் வைச்சிருக்கிறவங்களுக்கு காப்புறுதி நிறுவனத்தால இழப்பீடுகள் வழங்கப்படும் எண்டு நேற்று கூட்டம் வைச்சு சொல்லியிருக்கினம். ஆனால் அதிலையும்; பிரச்சனை. குத்தகைக்கு விவசாயம் செய்யிறவங்களுக்கு காப்புறுதியில்லை எண்டு சொல்லியிருக்கிறாங்கள்.  அதேபோல வயல்ல நிக்கிற  நெல்லுகளையும், புல்லுகளையும் ஆடு மாடுகள் கடித்திருந்தா காப்புறுதி தர மாட்டம் எண்டு காப்புறுதி நிறுவனம் நிபந்தனை கொடுத்தும் இருக்கினம்.
                             இந்த நிபந்தனையை நாங்கள் ஏற்றுக்கொள்ளல. பயிர்கள் எல்லாம் அழிஞ்சு போச்சு இனி ஒரு பிரியோசனமும் இல்லை. ஆடு, மாடுகளாச்சும் திணணட்டும் என்று விட்டுட்டம். இதால இப்போ காப்புறுதியும் எங்களுக்கு கிடைக்குமா எண்டு ஐம்மிச்சம் தான் என்கிறார் ஏக்கத்துடன்.
வேற தொழில் ஒண்டும் எங்களுக்குத் தெரியாது. பரம்பர பரம்பரையா வயல் தான் செய்யிறம்.இனி மேல் காலத்தில வயல் செய்யிறது எண்டால் கஸ்ரம் தான். சோத்துக்கே வேற ஒருத்தனிட்ட கையேந்த வேண்டிய நிலை வரப்போகுது. எங்களுக்கு மட்டமி;ல்லை. யாழ்ப்பாணத்தில இருக்கிற விவசாயிகள் எல்லாருக்கும் இது தான் நிலமை. இதை யாரும் உணருர மாதிரி தெரியேல்ல. எல்லாம் கடவுள் விட்ட வழிதான் என்று வாழ்க்கை வெறுத்தவறாய் நெல்லை விதைத்து புல்லை அருத்துக் கொண்டு எங்களை விட்டு விலகிச்சென்றார் பெரியவர் கந்தசாமி.

0 comments: